காட்சி 6
நேரம்: மதியம் மணி 2
இடம்: காஞ்சனா வீடு
உறுப்பினர்கள்:
சிந்தாமணி, காஞ்சனா, ராமாயி அம்மா ஒரு கர்ப்பிணிப் பெண் 4 சிறுவர்கள்
4 சிறுமிகள் மற்றும் வீராயி
(சிந்தாமணி மற்றும் வீராயி செருப்பைக் கழற்றி வெளியே விட்டு நுழைகிறாள். உள்ளே சுத்தியல்களில் புளி உடைக்கும் சத்தம் லொட் லொட் என்று ஒன்று மாற்றி ஒன்றாகச் சிறு தொழிற்சாலை போல் கேட்கிறது.
சிந்தாமணி:
உள்ளே வரலாமா, (சிரித்தபடியே கேட்டுக் கொண்டு உள்ளே நுழைகிறாள்)
(புளி உடைக்கும் சுத்தியல்களின் ஓசை சட்டென்று நின்று ஒரு மௌனம் பரவுகிறது)
காஞ்சனா: அட வாங்க வாங்க பிரசிடெண்ட் அம்மா, வேகா வெயில்ல வீடு தேடி வந்துட்டீங்க.
சிந்தாமணி:
நீங்க தான வரவச்சுட்டீங்க.
காஞ்சனா: நாங்களா…. நான் உன்னை இட்டாரச் சொல்லலியே
சிந்தாமணி:
நீன்னா நீயா… அந்த ராமாயி அம்மா தான்
ராமாயி (வயதானவள்) : நான் என்னா கண்ணு சொல்லிட்டேன்?
சிந்தாமணி:
(புன்சிரிப்பு மாறாமல்) மூணு நாளா தெரு லைட் எரியலே. ஒங்க குழிப்பணியார போண்டா வடை பிசினஸ் நடக்கலே. மூணு நாளா. அதுக்காக டில்லி கவர்மெண்ட்லர்ந்து பஞ்சாயத்து வரைக்கும் ஒரு புடிபுடிச்சுக் கடாஞ்சி வுட்டுட்டீங்க. சரியா?
ராமாயி: (கோபமாக) யாரு சொன்னது?
சிந்தாமணி:
குருவி வந்து சொல்லுச்சு. அதுவே பறந்து போய் லைன்மேன கௌப்பிட்டு வந்து கம்பம் ஏறி லைட்ட மாத்தச் சொல்லிடிச்சு வௌக்கு இப்ப எரியுது.
ராமாயி: (முகமலர்ச்சியாக) நா என்னா கண்ணு பண்ணட்டும். நான் அத நம்பிப் பொளக்கிறவ முந்தா நேத்திக்கு முன்னால அரைச்ச மாவநானே மூணு நாளா தோச சுட்டுத் துண்ணு தீத்தேன்.
சிந்தாமணி:
இப்ப போயி வௌக்கு எரியுதா இல்லியாண்ணு பாத்துட்டு வந்துடுங்க
ராமாயி: நீ சொன்னா சரிதான்!
சிந்தாமணி:
ஊஹும் நீங்க எழுந்து போய்ப் பாத்துட்டு வரணும். எழுங்க. அதுவரைக்கும் நீங்க நசுக்க வேண்டிய புளிய நான் நசுக்கறேன்.
ராமாயி. எம்மா….. எம்மா…… வேண்ம்டா கண்ணு
சிந்தாமணி:
போங்கன்னு சொன்னா போங்க (எதிரில் சென்று அவள் கையிலிருந்த சுத்தியலை வாங்கித் தான் அமர்ந்து புளி நசுக்கத் தொடங்குகிறாள்)
(ராமாயி தலையைத் தொங்கப் போட்டபடி தெருவை நோக்கி நடக்கிறாள்)
காஞ்சனா: (குறுக்கிட்டு) அத்தே வர்றப்ப அடுப்படியிலே மோர்ப்பானயிலே ஒரு டம்ளர் மோர் எடுத்தாங்க. பிரசிடெண்ட் அம்மா வெயிலுக்குக் கொஞ்சம் குடிக்கட்டும்.
சிந்தாமணி:
அதெல்லாம் வேணாம் காஞ்சனா
காஞ்சனா: இவ்ள தூரம் இந்த வெயில்ல வந்து ஒரு டம்ளர் மோர் கூட சாப்டாம போனீன்னா எங்களுக்குத் தான் கொறவு
சிந்தாமணி:
சரி… ஒங்க பிரியம் (திரும்பிப் பார்த்து) அட கோவிந்தி கூட புளி நசுக்கறிப்பிலயா?
கோவிந்தி:
(தலையைக் கோணி நாணத்தோடு) ஆமாங்கம்மா….. இப்படி சீசன்ல வந்து ஔச்சி நாலு காசு பார்த்தா தான உண்டு
சிந்தாமணி:
பிளாஸ்டிக் குடம் கேட்டியாம எங்க மாமியாரு சூப்பர் கொடம் வாங்கி வச்சிருக்காங்க
கோவிந்தி: என்னா வெல
சிந்தாமணி:
பதினெட்டு ரூபா தான்! சகாயம்
கோவிந்தி: ரெண்டு கல்லு தொலவு நடந்து போயி கைமாத்தி இடுப்பி மாத்தி தலயிலே வச்சே பட்டு பட்டுன்னு கொடங்க ஒடஞ்சு போயிடுது சிந்தாமணி. தல எரிச்சலு
தாங்க முடியறதில்லே.
காஞ்சனா: பிளாஸ்டிக் கொடம் ‘தக்‘ குணு இருக்கு. நம்ம அம்மாவும், பாட்டியும் பாட்டிக்குப் பாட்டி எல்லாம் பித்தாளக் கொடமும் மண் கொடமும் சொமந்தாங்ஙகளாமே அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
சிந்தாமணி:
(பேசாமல் யோசனையோடு புளி நறுக்கிறாள் பிறகு தலை நிமிரிந்து சுற்றியுள்ள சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறாள்) ஆமா…. இவுங்க எல்லாம் ஏன் ஸ்கூலுக்குப் போகாம இப்படி ஒக்காந்து புளி நறுக்கிட்டிருக்காங்க
கர்ப்பிணிப் பெண்: இஸ்கோலுக்குப் போயி என்னா வாரிக் கிளிச்சுடப் போறாங்க. நீ பரவால்லம்மா புத்தியோட ஒத்தப் பொட்டப்புள்ளய பெத்து நிறுத்திகிட்டே. அத அக்கறயாப் படிக்க வச்சுட்டு வர்றே. எங்க கதயச் சொல்லு. புத்தி கெட்டுப் போயி ஆம்பளப் புள்ள வேணும். ஆம்பளப் புள்ள வேணும்னு அடுக்கடுக்கா நாலு பொட்டப் புள்ளய பெத்துட்டோம்.
சிந்தாமணி:
ச்சே! என்ன பேச்சு பேசறீங்க? ரெண்டோட நிறுத்தாமப் போனது ஒங்க தப்பு. அதுக்கு ஏன் பொட்டப்புள்ளங்கண்ணு சலிச்சுக்கிறீங்க?
வீராயி: நீ பரவால்ல அம்மா. ஒம் புள்ளய படிக்க வச்சு கலெக்டராவோ டாக்டராவோ இஞ்சினியராவோ ஆக்கிடுவே….. எங்க கெதி?
கர்ப்பிணிப் பெண்: நாலு பொட்டப் புள்ளங்களுக்குக் கஞ்சி ஊத்தறதே நாய் பட்ட பாடு இன்னும் அதுங்க பெரிசாயி கண்ணாலம் காட்சின்னு வந்து நின்னா நாங்க இவங்களப் படிக்கவச்சுப் போட்டு என்னாத்தப் பண்றது?
வீராயி: (நறுக்கிய புளியைக் கூடையில் வாரிக் கொண்டே) ஏதோ சீசன்ல இப்படி புளி நசுக்க, மல்லாக் கொட்ட உரிக்க, மானத்தோட கஞ்சியாவது குடிக்க முடியுது
சிந்தாமணி:
படிக்க வேண்டிய வயசுலே அவங்க கண்ணக் கட்டிப் போட்டு வேல செய்ய வச்சு கஞ்சிய ஊத்திடுவீங்க. அப்பறம் அதுங்க காலத்தில் நாலு எழுத்து படிக்கலியேண்ணு ஒங்க மாதிரியே கெடந்து கொமயணுமா?
கர்ப்பிணிப் பெண்: அட போங்க அம்மா! இது நாள் வரிக்கும் இதுங்களப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புன்னதே ஒரு வேளயாவது வவுறார சத்துணவு கெடக்கும்ணுதான். பிச்சை எடுத்தாராம் பெருமாளு. அந்தப் புடுங்கினாராம் அனுமாருண்ணு அதுக்கும் ஒரு
வில்லங்கம் வந்துருச்சே.
சிந்தாமணி:
என்ன என்ன? (புளி நசுக்கும் சுத்தியல் நிறுத்திக் கேட்கிறாள்)
வீராயி: பின்ன என்னம்மா? நம்ப ஸ்கோல்ல போடற சத்துணவு வயத்தில அடிச்சு வாங்கிச் சாப்பிடறாரு சத்துணவு போடறவரு
சிந்தாமணி:
என்னம்மா சொல்றீங்க? கொஞ்சம் வெலவரமாச் சொல்லுங்க.
வீராயி: ஒனக்குத் தெரியவே தெரியாதா சிந்தாமணிம்மா?
சிந்தாமணி:
நெஜம்மா தெரியாது
வீராயி: நம்ம ஸ்கூல்ல போடற சத்துணவுல சத்தும் இல்ல உணவும் இல்ல. ங்க இருக்கற சத்துணவுப் பெருச்சாளி குறுக்கால குளி தோண்டி உண்டது போக கண்டது மீதிண்ணு கண்ணத் தொடச்சு விட்டு கை காமிச்சு வுட்டுடறாரு.
சிந்தாமணி:
இத ஏன் எங்கிட்ட முன்னாடியே சொல்ல்லே?
வீராயி: ஏம்மா ஒவ்வொண்ணுத்துக்கும் வந்து உன்னாண்ட நிண்ணு நிண்ணு ரொதி குடுத்துட்டிருந்தா சீ போங்கடிண்ணு நீயே சலிச்சுப் போயிட மாட்டே
கர்ப்பிணிப் பெண்: ஒங்கிட்ட வந்து சொன்னா நீ போயி கண்டிப்பு பண்றேண்ணு வச்சுக்க. ரெண்டு நாளைக்கி யோக்கியமாப் போடுவாரு மூணா நாளு தெசை திரும்பிடுவாரு
சிந்தாமணி:
அப்ப நீங்கள்ளாம் ஒண்ணாச் சேந்த ஏன் போயிக் கேக்கல?
கர்ப்பிணிப் பெண்: ஆமா ட்டச்சிங்க எழுந்து நிண்ணு பெரிய புரட்சி பண்ணிக் கிளிச்சுடுவம்.
சிந்தாமணி:
இதான்….. இதான்….. இத தான் கபோதித் தனம்ங்கறது. நாம பொட்டச்சிங்க நாம பொட்டச்சிங்கண்ணு நாமே பாறாங்கல்ல ஏத்தி தலையில வச்சுக்க வேண்டியது. அப்புறம் எங்க தலைல சொமை எங்க தனலை பளுண்ணு பொலம்ப வேண்டியது. எந்தக் காலத்தில இருக்கறீங்க? தூக்கிப் போட்டுட்டு வந்து முச்சந்திக்கு வந்து குரல் கொடுங்க தோ….. ராமாயி கொரல் குடுதுக் கரண்ட் வௌக்க எரிய வைக்கல
(எல்லாரும்
’கொல்’ லென்று சிரிக்கின்றனர்)
சிரிச்சிட்டீங்க சந்தோசம். எனக்கும் சிரிப்பு வந்துட்டுது. ஆனா நடக்கற அக்குருமத்த எதித்த்துக் கேக்கறதுக்கும் போராடறதுக்கும் நீங்க முன்வர்ற வரிக்கும் ஒரு தெருப்புளுதியும் இருக்கற எடத்த வுட்டு நவுராது (வீராயி பக்கம் திரும்பி) ஆனா இத நான் விடப் போறதில்லே. ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டிய வயசுலே புள்ளைங்கள மடக்கி வச்சு வேல வாங்கிறது தப்பு. அதுக்குத் தண்டனை உண்டுண்ணு சட்டமே போட்டுட்டாங்க
வீராயி: சட்டத்துக்கு என்னா? நாக்காலில ஒக்காந்து பேன் காத்து வாங்கிட்டு போட்டுருவாங்க. இங்க நடமொறைக்கு வந்து நாலு புள்ளங்களப் பெத்து வளத்துக் கஞ்சி ஊத்திப் பாத்தாங்கன்னா தெரியும்?
சிந்தாமணி:
(எரிச்சலுடன்) அட என்னாக்கா சும்மா கஞ்சி கஞ்சின்னு பொல்லாத கஞ்சி ஊத்தற வளாட்டம் கத பேசறே? கண்ணத் தெறந்து வுட்டுடு. அதுங்க வசதிய அதுங்க தேடிக்கிட்டோம்ணு சொல்றேன். கஞ்சி ஊத்தறேன்னு பாட்டு பாடறே.
காஞ்சனா: சிந்தாமணி சொல்றது நாயந் தானேம்மா.
அவங்கப்பா இவள அவ்வளோ படிக்க வக்கலின்னா இவ பிரசிடென்ட் ஆயிரக்க முடியுமா? இவ படிச்ச காலத்தில ஸ்கோலே நம்ம ஊர்ல இல்ல. இப்ப எட்டாங்கிளாஸு வரைக்கும் இருக்கு
சிந்தாமணி:
அடுத்த வருசம் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க ஹைஸ்கூலு கொண்டு வரத் திட்டம் போட்டிருக்கோம். நீங்க எல்லாருமே நாளைக்கு உங்க புள்ளங்கள தப்பாம அனுப்புங்க. அவங்க :சாப்டறது சத்துணவா இல்லியாண்ணு நான் போய் செக் பண்ணிட்டு வர்றேன்.
காஞ்சனா: நீ சுடுகாட்டுக்கு ரோடு போடுவியா –குடி தண்ணிக்கு ஓவர் டாங்கு கட்டுவியா அதுல இத வேற ஒந்தலைல ஏத்தணுமா நாங்க?
சிந்தாமணி:
இது என்னா காஞ்சனா. எல்லாத்தயும் நானே செய்யறாப்பில ஒதுக்கி வச்சி ஓரங்கட்டறே… நாம செய்யறோம். ஒண்ணா சேர்ந்து செய்யறோம். நீங்கள்ளாம் ஓட்டுப் போடலேண்ணா நான் இல்லே நான். தலைவி ஆயிருக்க முடியாது. நீ தலைவி ஆயிட்ட டீண்ணு நீங்க ஒதுக்கினாக் கூட நான் ஒதுங்கிட மாட்டேன்.
நம்மால ஒரு காரியத்த செஞ்சு நெல நிறுத்திக் காட்டவேண்ணா இந்தப் பத்தி என்னாத்துக்கு பகட்டுக்கா? பவுசுக்கா? தூக்கி எறிஞ்சுப் போட்டுட்டு நான் ஒங்களோட வந்து நிண்ணுக்குவேன்.
வீராயி: இந்த வார்த்தைபோதும் சிந்தாமணி நாங்க உன்ன உட்டு நவர மாட்டோம்.
(ராமாயி வாயெல்லாம் பல்லாக கையில் மோர்த் தம்ளருடன் வருகிறாள்)
சிந்தாமணி:
என்ன ராமாயம்மா. திருப்தி தானா? (புளி நறுக்கிய படியே கேட்கிறாள்)
ராமாயி: எம்மாடி கண்ணு…. நீ தாண்டி மனுஷி
(ராமாயி கொடுத்த மோர் டம்ளரை வாங்கிக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்து விட்டு எழுந்திருக்கிறாள் சிந்தாமணி)
சிந்தாமணி:
(புளி நசுக்கும் சிறுவர் பக்கம் திரும்பி) நீங்க நாளயிலேர்ந்து யாரு என்ன சொன்னாலும் நிக்காம பள்ளிக் கூடம் போறீங்க என்ன சரியா?
சிறுவர்கள்:
சரிங்க அக்கா
சிந்தாமணி:
(காஞ்சனா பக்கம் திரும்பி) புளி நசுக்கறதுக்கு வேற பெரிய ஆளுங்க கெடைக்க மாட்டாங்களா காஞ்சனா?
காஞ்சனா: ஏன் கெடைக்காம? அத நாங்க பாத்துக்கறோம்.
சிந்தாமணி:
இவங்க சத்துணவு விசயத்த நான் நாளைக்கே சரிப்படுத்தறேன். அப்பறம் இன்னொரு விசயம். இப்படி ஒரு தொழில் விட்டா இன்னொரு தொழில்னு சீசனுக்கு சீசன் அல்லாடறத விட்டுட்டு நெரந்தமா ஒருவழீ தேடிக்க ஒங்களுக்கு யோசனை வரலே?
வீராயி: யோசனை வந்து என்னா பண்றது?
(கையைச் சுண்டிக் காட்டி) துட்டு வேணுமே
சிந்தாமணி:
நம்மளச் சுத்தி என்ன நடக்குதுண்ணே தெரியாம இருந்தா துட்டு எப்படி வரும்?
காஞ்சனா: புரியலியே…. புரியறாப்பிலே சொல்லு
சிந்தாமணி:
சுய உதவிக் குழுக்கள்ணு நாம குழுக்கள் அமைச்சு சின்னச் சின்னத் தொழில் பண்றதுண்ணா கடனுதவி கெடைக்கும். ஆனா நாம்ப குளுவுங்கள அமைக்கணும்.
காஞ்சனா: நீ கோடு போட்டுக் காட்டு நாங்க ரோடு போட்டுர்றோம்
சிந்தாமணி:
அப்படி வாங்க காஞ்சனா நீ தான் குழுவோட தலைவி. ரெண்டு மூணு நாள்ல நாம்ப சந்திச்சு வெவரம் பேசுவோம். நான் வர்ட்ட்டா… எங்க வூட்டுக்காரு வந்துட்டிருப்பாரு
(சிந்தாமணி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வருகிறாள்)
[தொடரும்]